கிராம மக்களுக்கு ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் உதவி


கிராம மக்களுக்கு ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் உதவி
x
தினத்தந்தி 11 May 2020 6:45 AM GMT (Updated: 11 May 2020 6:45 AM GMT)

ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் கொரோனா ஊரடங்கால் பாதித்த தனது கிராமமான சாககூபல்பூரை சேர்ந்த ஆயிரம் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவினார்.

புவனேஷ்வர்,

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் 24. ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் பிறந்த இவர், 2018ல் நடந்த ஆசிய விளையாட்டு 100, 200 மீ., ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஊரடங்கால் புவனேஸ்வரில் உள்ள இவர், தனது சொந்த கிராமத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிட முடிவு செய்தார். இதற்காக மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான சாககூபல்பூரை சேர்ந்த ஆயிரம் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவினார்.

இது குறித்து டுட்டீ சந்த் கூறியதாவது:-

ஊரடங்கால் எனது சொந்த கிராமத்தில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய திட்டமிட்டேன். இதற்காக மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றேன். நான் வருவதை கிராம மக்களுக்கு முன்னதாகவே தெரிவித்துவிட்டேன்.

வீட்டிற்கு வந்த அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினேன். எங்கள் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இம்முறை 1000 பேருக்கு மட்டுமே உணவு வழங்க முடிந்தது. அடுத்த முறை 2000 பேருக்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story