பிறந்தநாளில் மகனுக்கு கேக் பரிசளித்த டெல்லி காவல்துறைக்கு நன்றி - மேரிகோம்


பிறந்தநாளில் மகனுக்கு கேக் பரிசளித்த டெல்லி காவல்துறைக்கு நன்றி - மேரிகோம்
x
தினத்தந்தி 15 May 2020 5:33 AM GMT (Updated: 15 May 2020 5:33 AM GMT)

தனது மகனின் பிறந்தநாளில் கேக் பரிசளித்த டெல்லி காவல்துறைக்கு நன்றி என குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். மேலும் மேரி கோம் மாநிலங்களைவை உறுப்பினராகவும் உள்ளார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மேரி கோம் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் மேரிகோமின் இளைய மகன் பிரின்ஸ் கோமின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனால் மகனின் பிறந்த நாளை வீட்டிலேயே குடும்பத்தினருடன் மெரி கோம் கொண்டாடி வருகிறார். அப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் அங்கு சென்ற டெல்லி காவல்துறையினர், அவரின் இளைய மகன் பிரின்ஸுக்கு கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தினர். இதனால் மேரிகோம் குடும்பத்தினர் டெல்லி காவல்துறையின் செயலை கண்டு பூரிப்படைந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேரி கோம், இந்த ஆண்டு எனது மகனின் பிறந்த நாளை டெல்லி சிறப்பானதாக மாற்றியுள்ளதாகவும் தனது மகனுக்கு கேக் பரிசளித்த டெல்லி காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் அனைவரும் உண்மையான வீரர்கள் எனவும் உங்களின் இந்த அர்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story