பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களம் இறங்குவேன் உசேன் போல்ட் அறிவிப்பு


பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களம் இறங்குவேன் உசேன் போல்ட் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2020 12:45 AM GMT (Updated: 12 July 2020 12:45 AM GMT)

உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார்.

கிங்ஸ்டன்,

உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது. 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற 33 வயதான உசேன் போல்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது பயிற்சியாளர் கிளைன் மில்ஸ் மீண்டும் என்னிடம் வந்து, இதை செய்யலாம் (மறுபிரவேசம்) என்று சொன்னால், அதற்கு தயார். ஏனெனில் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். நாம் இதை செய்யப்போகிறோம் என்று அவர் கூறினால், அது சாத்தியமே என்பதை அறிவேன். எனவே அவர் அழைத்தால் மறுபடியும் களம் இறங்க தயார்’ என்றார்.

உசேன் போல்ட்- காசிபென்னட் தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. வாழ்க்கையில் ஒரு தந்தையாக நிறைய மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. இது, ஒரு உலக சாதனையை படைப்பதை விட கடினம் என்றும் போல்ட் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

Next Story