தனிமைப்படுத்துதல் விதிமுறை மீறல்: குத்துச்சண்டை வீரர்கள் மீதான புகார் குறித்து விசாரிக்க கமிட்டி அமைப்பு


தனிமைப்படுத்துதல் விதிமுறை மீறல்: குத்துச்சண்டை வீரர்கள் மீதான புகார் குறித்து விசாரிக்க கமிட்டி அமைப்பு
x
தினத்தந்தி 12 July 2020 1:54 AM GMT (Updated: 12 July 2020 1:54 AM GMT)

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி,

பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கல்வி (என்.ஐ.எஸ்) நிறுவன வளாகத்தில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த மையத்தில் இன்னும் சில வாரங்களில் இந்திய குத்துச்சண்டை அணியினருக்கான பயிற்சி முகாம் தொடங்க இருக்கிறது. பயிற்சி முகாமுக்கு தேர்வாகியுள்ள ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற விகாஸ் கிருஷ்ணன், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற சதீஷ்குமார் மற்றும் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் ஆகியோர் இந்த மையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதுடன், தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை கடைப்பிடித்து அறையில் தனியாக இருக்கும்படி ‘சாய்’ அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் குத்துச்சண்டை வீரர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை மீறி மற்ற வீரர்கள் தங்கி இருக்கும் பகுதி மற்றும் உணவு வழங்கப்படும் இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பளுதூக்குதல், தடகள வீரர்கள் புகார் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சாய் செயலாளர் ரோகித் பரத்வாஜ் தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாய் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கமிட்டி முழுமையாக விசாரணை மேற்கொள்ளும். இதில் யாராவது விதிமுறையை மீறி தவறு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story