இந்திய அணியினருக்கு பயிற்சி அளிக்கும் 32 வெளிநாட்டு பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டித்தது ‘சாய்’


இந்திய அணியினருக்கு பயிற்சி அளிக்கும் 32 வெளிநாட்டு பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டித்தது ‘சாய்’
x
தினத்தந்தி 22 July 2020 10:30 PM GMT (Updated: 22 July 2020 7:46 PM GMT)

ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் பல்வேறு இந்திய அணியினருக்கு கிரஹாம் ரீட் (ஆண்கள் ஆக்கி) உள்பட 32 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் ஒப்பந்தம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதாக இருந்தது. ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போடப்பட்டு இருப்பதால் பயிற்சியாளர்களின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தன. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வெளிநாட்டு பயிற்சியாளர்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் பல்வேறு இந்திய அணியினருக்கு பயிற்சி அளித்து வரும் 32 வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ‘புதிய பயிற்சியாளர் வீரர்களை புரிந்து கொள்ள நேரம் பிடிக்கும். இதேபோல் புதிய பயிற்சியாளரின் பயிற்சி பாணியை புரிந்து கொள்வதற்கு வீரர்களுக்கும் காலஅவகாசம் தேவைப்படும். அதற்கு தற்போது நேரம் இல்லை என்பதால் வெளிநாட்டு பயிற்சியாளர்களை அப்படியே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சிபாரிசின் பேரில் முந்தைய நிபந்தனைகள் மற்றும் அதே சம்பளத்துடன் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று சாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story