விளையாட்டு துளிகள்......


விளையாட்டு துளிகள்......
x
தினத்தந்தி 30 Sep 2020 9:15 PM GMT (Updated: 30 Sep 2020 7:34 PM GMT)

மார்ச் 24-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

* ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் டெல்லி அணியின் கேப்டன் என்ற முறையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்சின் ஆலோசகருமான ஷேன் வார்னே நேற்று அளித்த பேட்டியில், ‘சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் அணி) சிறப்பு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்காக எல்லா வடிவிலான போட்டியிலும் விரைவில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான், சென்னை, மும்பை, டெல்லி ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் என்று கருதுகிறேன்’ என்றார்.

* பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். இந்திய வீராங்கனைகள் தலைமையில் 3 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நான்கு ஆட்டங்களையும் ஒரே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஐ.பி.எல்.-ல் பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகள் பெண்கள் போட்டியிலும் கடைபிடிக்கப்படும். இதையொட்டி அக்டோபர் 2-வது வாரத்துக்குள் இந்திய வீராங்கனைகள் அமீரகம் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நீச்சல் வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளங்களை வருகிற 15-ந் தேதி முதல் மீண்டும் திறந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நீச்சல் வீரர், வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story