துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:11 PM GMT (Updated: 5 Oct 2020 10:11 PM GMT)

சென்னை அணி நீண்டகாலமாக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வருவது பாராட்டுக்குரியதாகும் என்று தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கூறினார்.

* துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற பிறகு சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன், சக வீரர் பிளிஸ்சிஸ்க்கு அளித்த பேட்டியில், ‘பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் எடுக்கும் முடிவுகள் நம்ப முடியாத வகையில் இருக்கும். இருவரும் வீரர்களின் திறமை, தரம் மீது நம்பிக்கை வைப்பவர்கள். நம்பிக்கை வைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் என்பது அவர்களுக்கு தெரியும். சென்னை அணி நீண்டகாலமாக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வருவது பாராட்டுக்குரியதாகும்’ என்றார். இதேபோல் டுபிளிஸ்சிஸ்சும் பயிற்சியாளர் மற்றும் கேப்டனை வெகுவாக புகழ்ந்துள்ளார். அதில் ‘வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விஷயத்தில் சென்னை அணி மற்ற அணிகளை காட்டிலும் அதிக நம்பிக்கையுடன் செயல்படுகிறது. இதுபோல் செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த ஒரு பேட்டியில், ‘மோசமான முடிவு கிடைத்தாலும் அணியில் மாற்றம் செய்யாமல் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதிக வாய்ப்பு அளிப்பது வெற்றிக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன். அணியில் மாற்றம் செய்வதால் நன்மை கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. வீரர்கள் செயல்படுவது சரியாக இருந்தால் எங்களால் முடிந்த வரை நீண்டகாலத்துக்கு அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். நாங்கள் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கிறோம். வலைப்பயிற்சியில் வாட்சன் தடுமாறினால் நாங்கள் கவலைப்பட்டு இருக்கலாம். அவர் நல்ல நிலைக்கு வர சற்று காலம் பிடித்து இருக்கிறது. மற்றப்படி அனுபவசாலியான அவரது பேட்டிங்கில் பிரச்சினை எதுவுமில்லை’ என்று தெரிவித்தார்.

* முன்னணி வீரர்-வீராங்கனைகளுக்கான தேசிய டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் வருகிற 15-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வீராங்கனைகள் தயக்கம் காட்டியதாலும், பயிற்சி முகாம் நடைபெறும் இடம் இன்னும் தயார் செய்யப்படாததாலும் இந்த பயிற்சி முகாம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Next Story