‘டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராக ஆசிய குத்துச்சண்டை போட்டி முக்கியமானது’ - மேரிகோம் பேட்டி


‘டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராக ஆசிய குத்துச்சண்டை போட்டி முக்கியமானது’ - மேரிகோம் பேட்டி
x
தினத்தந்தி 19 May 2021 11:06 PM GMT (Updated: 19 May 2021 11:06 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராக ஆசிய குத்துச்சண்டை போட்டி முக்கியமானது என்று நம்புகிறேன் என மேரிகோம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 20 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய ஆண்கள் அணியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அமித் பன்ஹால் (52 கிலோ உடல் எடைப்பிரிவு), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ) மற்றும் வினோத் தன்வார் (49 கிலோ), முகமது ஹூசாமுதீன் (56 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஷிவதபா (64 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ), சஞ்சீத் (91 கிலோ), நரேந்தர் (91 கிலோவுக்கு மேல்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மனிஷ் கவுசிக் (63 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்) ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இந்திய பெண்கள் அணியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), பூஜாராணி (75 கிலோ) மற்றும் மோனிகா (48 கிலோ), சாக்‌ஷி (54 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), லால்பாத் சைஹி (64 கிலோ), சவீட்டி (81 கிலோ), அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி நாளை புறப்பட்டு செல்கிறது.

6 முறை உலக சாம்பியனான 38 வயது இந்திய வீராங்கனை மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா பரவல் காரணமாக போதிய அளவுக்கு பயிற்சி பெற முடியாவிட்டாலும் இந்த போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக தீவிரமாக எனது திறமையை பரிசோதிக்க இந்த போட்டி அவசியமானதாகும். பல்வேறு காரணங்களால் பயிற்சி தடைப்பட்ட நிலையில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் முக்கியமானது. ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராக இந்த போட்டி உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story