டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 21 Jun 2021 8:58 PM GMT (Updated: 21 Jun 2021 8:58 PM GMT)

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

டோக்கியோ, 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ரசிகர்களை போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டது. ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா தொற்று பரவலாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதில் நீண்ட இழுபறி நீடித்தது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நேரில் காண உள்ளூர் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனை கூட்டம் டோக்கியோவில் நேற்று நடந்தது. காணொளி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் அரசு மற்றும் டோக்கியோ பெருநகரம், போட்டி அமைப்பு குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண உள்ளூர் ரசிகர்களை கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து போட்டி அமைப்பு குழு தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ கூறுகையில், ‘ஜப்பான் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பான முறையில் நடத்தப்படும். பொது நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் அளவுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க ஒவ்வொரு ஸ்டேடியத்திலும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். போட்டியை காண வருபவர்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் சூழ்நிலை உருவானால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

‘கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவசர நிலை அமல்படுத்தும் நிலைமை உருவானால் ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புடனும், பத்திரமாகவும் நடைபெறுவதற்கு ரசிகர்களுக்கு தடை விதிக்க தயங்கமாட்டோம்’ என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

Next Story