துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் மீண்டும் ஏமாற்றம் பதக்கமின்றி சவால் முடிவுக்கு வந்தது


துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் மீண்டும் ஏமாற்றம் பதக்கமின்றி சவால் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 2 Aug 2021 9:44 PM GMT (Updated: 2 Aug 2021 9:44 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பந்தயத்தின் தகுதி சுற்றில் மொத்தம் 39 வீரர்கள் கலந்து கொண்டனர்.

டோக்கியோ, 

 இதில் ‘டாப்8’ இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். தகுதி சுற்றில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைத்த இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மொத்தம் 1,167 புள்ளிகளுடன் 21-வது இடமும், 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 1,157 புள்ளிகளுடன் 32-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டியை எட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள். இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

இந்த ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் 15 பேர் (7 வீராங்கனைகள், 8 வீரர்கள்) களம் கண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் உலக போட்டியில் பதக்கம் குவித்தவர்கள் என்பதால் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கத்தை சுடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போனது. கடந்த (2016) ஒலிம்பிக் போட்டியை போல் இந்த முறையும் நமது வீரர்கள் பதக்கமின்றி வெறுங்கையுடன் நாடு திரும்புகிறார்கள். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 7-வது இடம் பெற்றார். அவரை தவிர மற்ற இந்தியர்கள் யாரும் இறுதி சுற்றுக்கு கூட நுழையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

Next Story