‘பாராஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம்’தீபா மாலிக் நம்பிக்கை


‘பாராஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம்’தீபா மாலிக் நம்பிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2021 1:57 AM GMT (Updated: 13 Aug 2021 1:57 AM GMT)

பாராஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம் என்று இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறது. நடப்பு சாம்பியன் தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்), தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), உலக சாம்பியன் சந்தீப் சவுத்ரி (ஈட்டி எறிதல்) ஆகியோருக்கு பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. 

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் விதமான நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடத்தப்பட்டது. இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் பேசுகையில் ‘நமது பாரா ஒலிம்பிக் வீரர்களின் லட்சியமும், தன்னம்பிக்கையும் 130 கோடி இந்தியர்களுக்கு உந்துசக்தி அளிக்கிறது. அவர்களின் துணிச்சலுக்கு முன்பு மிகப்பெரிய சவால்கள் எல்லாம் ஒன்றுமில்லை. 

கடந்த பாரா ஒலிம்பிக்கை விட இந்த முறை பங்கேற்போரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம். உங்களது திறமை மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கடந்த ஒலிம்பிக்கை விட இந்த முறை மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

ரியோ பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி தலைவருமான தீபா மாலிக் கூறுகையில், ‘இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 54 வீரர்களில் குறைந்தது 24 பேர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் உள்ளனர். எனவே நாங்கள் மிகவும் வலுவான அணியாக இருக்கிறோம். 

நிச்சயம் இந்த முறை முன்பை விட அதிக பதக்கங்களை வென்று வரலாறு படைப்போம் என்று நம்புகிறேன். இந்த வீரர்களுடன் சங்கத்தலைவர் என்ற முறையில் இணைந்து கடினமாக உழைத்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.’ என்றார்.

Next Story