ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் செரீனா பங்கேற்பது சந்தேகம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் செரீனா பங்கேற்பது சந்தேகம்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 31 Dec 2017 8:44 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் செரீனா பங்கேற்பது சந்தேகம்

அபுதாபி,

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற போது, 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதன் பிறகு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த செரீனாவுக்கு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

மறுபடியும் டென்னிஸ் களம் திரும்புவதற்காக கடந்த ஒரு மாதமாக பயிற்சியில் ஈடுபட்டார். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்கு முன்னோட்டமாக அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியில் களம் இறங்கிய செரீனா வில்லியம்ஸ், அதில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) எதிர்கொண்டார். 67 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஆஸ்டாபென்கோ 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் செரீனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். சூப்பர் டைபிரேக்கரில் ரொம்பவே தடுமாறிய செரீனா ஆக்ரோஷமாக செயல்பட முயற்சித்து பந்தை பலமுறை வெளியே அடித்து தவறிழைத்தார்.

தோல்விக்கு பிறகு 36 வயதான செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், ‘டென்னிஸ் விளையாடுவது, சவால் அளிப்பது, ரசிகர்களின் ஆரவாரம் என்று எல்லாவற்றையும் சிறிது காலம் தவறவிட்டு விட்டேன். மறுபடியும் டென்னிஸ் களம் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நான் ஒரு குழந்தையின் தாய். களத்தில் இருக்கும் போது குழந்தையின் நினைப்பை தவிர்க்க முடியவில்லை. அடிக்கடி குழந்தை இருக்கும் பகுதியை பார்த்துக் கொண்டேன்’ என்றார்.

23 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான செரீனாவிடம் வருகிற 15-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்ட போது, ‘மறுபிரவேசம் செய்வதற்கு முழுமையாக தயாராகி விட்டேனா என்பது எனக்கு தெரியாது. மீண்டும் வரும் போது, சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்குரிய வலுவுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் உறுதியாக கலந்து கொள்வது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

Next Story