பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடாலிடம் வீழ்ந்தார், பெடரர்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடாலிடம் வீழ்ந்தார், பெடரர்
x
தினத்தந்தி 7 Jun 2019 11:01 PM GMT (Updated: 7 Jun 2019 11:01 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் நடாலிடம் வீழ்ந்தார்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான 2-ம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) கோதாவில் குதித்தனர்.

‘களிமண் தரை’ போட்டியில் ஆடுவதில் கில்லாடியான நடால் எதிர்பார்த்தது போலவே ஆதிக்கம் செலுத்தினார். லேசான மழையுடன் வேகமாக காற்று வீசிய கடினமான சீதோஷ்ண நிலையிலும் நடால் ஆக்ரோஷமாக ஆடி பெடரரை மிரள வைத்தார். முதல் செட்டை எளிதில் பறிகொடுத்த பெடரர் 2-வது செட்டில் தொடக்கத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பிறகு நடாலின் அதிரடியான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து விட்டார். 2 மணி 25 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

களிமண்தரை போட்டிகளில் பெடரருக்கு எதிராக 16 ஆட்டங்களில் மோதியுள்ள நடால் அதில் 14-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோவக் ஜோகோவிச் (செர்பியா) -டொமினிக் திம் (ஆஸ்திரியா) இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இருவரும் தலா ஒரு செட்டை வென்று 3-வது செட்டுக்கு ஆட்டம் நகர்ந்த போது மழை குறுக்கிட்டது. கனமழை பெய்ததால் இந்த ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-7 (4-7), 6-3, 6-3 செட் கணக்கில் 17 வயதான அமன்டா அனிசிமோவாவை (அமெரிக்கா) வெளியேற்றி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டினார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 38-வது இடம் வகிக்கும் 19 வயதான மார்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) 7-5, 7-6 (2) என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-வோன்ட்ரோசோவா தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக மோத உள்ளனர்.


Next Story