சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா ‘சாம்பியன்’


சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 8:44 PM GMT)

ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்தது.

டோக்கியோ, 

ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜப்பான் ஓபனில் அறிமுகம் ஆன முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. மொத்தத்தில் இது அவரது 76-வது சர்வதேச பட்டமாகும்.

இதே போல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர்.

1 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது அவரது 5-வது சர்வதேச பட்டமாகும். வாகை சூடிய அவர் ரூ.10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) போராடி வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

Next Story