டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார்


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் சிலிச்சை சந்திக்கிறார், ராம்குமார்
x
தினத்தந்தி 6 March 2020 12:09 AM GMT (Updated: 6 March 2020 12:09 AM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா, முன்னாள் சாம்பியன் குரோஷியா இடையிலான ஆட்டம் குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

ஜாக்ரெப்,

ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 182-வது இடத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவரான ராம்குமார், 37-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) சந்திக்கிறார். சிலிச், 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றவர் ஆவார். எனவே சிலிச்சை, ராம்குமார் வீழ்த்துவது கடினம் தான்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 132-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்கொள்கிறார். அதே சமயம் இந்தியாவின் முன்னணி ஒற்றையர் பிரிவு வீரரான சுமித் நாகல் (127-வது இடம்) வெளியே உட்கார வைக்கப்பட்டார். ‘இந்த ஆடுகளம் மிதமான வேகம் கொண்டது. பந்து அதிகமாக எழும்பாது. இத்தகைய ஆடுகளத்திற்கு ராம்குமார் பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே சுமித் நாகலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை’ என்று இந்திய அணியை வெளியில் இருந்து வழிநடத்தும் கேப்டன் ரோகித் ராஜ்பால் தெரிவித்தார்.

இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அனுபம் வாய்ந்த லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஜோடி, குரோஷியாவின் மாட் பவிச்-பிராங்கோ சுகுகோர் இணையை சந்திக்கிறது.

அதைத் தொடர்ந்து மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் மரின் சிலிச்-குணேஸ்வரன், ராம்குமார்-போர்னா கோஜோ மோதுகிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டேவிஸ் கோப்பை போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

Next Story