புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது - சானியா மிர்சா
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த இரு ஆண்டுகளாக குழந்தைப் பேறு காரணமாக டென்னிஸ் போட்டியை விட்டு விலகி இருந்ததார். கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பெட் கோப்பை தொடரில் இந்திய அணியை பிளே-ஆஃப் வரை வழி நடத்தினார். அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க கலிபோர்னியா சென்றார். ஆனால், அதற்குள் அந்தத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இந்தியாவில் லாக்டவுன் அறிவிப்பு வெளியாகும் முன் இந்தியா வந்து சேர்ந்தார். இதற்கிடையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் கலந்துகொண்ட சோயிப் மாலிக், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார்.
இந்தநிலையில் சானியா மிர்சா கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தானின் சியால்கோட்டில் வசித்து வருகிறார். சானியாவும் அவருடைய ஒரு வயது மகன் இசானும் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டகிராம் நேரலை நிகழ்ச்சியொன்றில் சானியா மிர்சா கூறியதாவது:
பாகிஸ்தானில் அவரும் இந்தியாவில் நானும் மாட்டிக்கொண்டு விட்டோம். எங்களுக்கு ஒரு சிறிய குழந்தை இருப்பதால் சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் இருவரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்.
யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம். சோயிப்பின் தாய்க்கு 65 வயது ஆகிறது. வீட்டில் குழந்தை ஒன்று இருப்பதால் என்னையும் அவனையும் வயதான பெற்றோரையும் எப்படிப் பாதுகாப்பது என சில நாள்களுக்கு முன்பு மிகவும் கவலைப்பட்டேன். டென்னிஸைப் பற்றி எண்ணும் நேரமல்ல இது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது. உதவி தேவைப்படுவர்களுக்கு என்னால் முடிந்தளவு நிதி திரட்டி உதவி செய்து வருகிறேன். ஏழைகள் படும் துயரத்தை வீடியோக்களில் காண்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இனி கொரோனா வைரஸ் பிரச்சினை முழுமையாக தீராமல் டென்னிஸ் போட்டிகளை மீண்டும் துவங்குவது மிகப் பெரிய ஆபத்து. ஒரு டென்னிஸ் தொடரில் 500 பேர் சுமார் 100 நாடுகளில் இருந்து பங்கேற்பார்கள். அவர்கள் யாருக்கும் வைரஸ் இருக்காது என கூற முடியாது. அது மிகப் பெரிய ஆபத்தாகமாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story