பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:46 PM GMT (Updated: 9 Oct 2020 10:46 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 14-வது இடத்தில் உள்ள டிகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 3 மணி 9 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 34 வயதான நடால் 6-3, 6-3, 7-6 (7-0) என்ற நேர்செட்டில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 13-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டினார். பிரெஞ்ச் ஓபனில் நடாலின் 99-வது வெற்றி இதுவாகும். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) அல்லது சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரில் ஒருவரை நடால் சந்திப்பார்.

சோபியா-ஸ்வியாடெக் பலப்பரீட்சை

பெண்கள் ஒற்றையர் பிரிவில் மகுடத்துக்காக இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது சோபியா கெனின் (அமெரிக்கா), தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை சந்திக்கிறார். இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல்முறையாகும்.

19 வயதான ஸ்வியாடெக், இந்த தொடரில் தனது அனைத்து ஆட்டங்களிலும் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார். இதனால் சோபியா கெனினுக்கு கடும் சவாலாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.14 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story