தி கேரளா ஸ்டோரி சர்ச்சை; மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் படம் அமைதியாகவே ஓடியது: விபுல் ஷா


தி கேரளா ஸ்டோரி சர்ச்சை; மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் படம் அமைதியாகவே ஓடியது: விபுல் ஷா
x

தி கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்படுவதற்கு முன் மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் அமைதியாகவே ஓடியது என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.

கொல்கத்தா,

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்திருந்தது. சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை பராமரிக்கவே இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை என தப்பித்து கொள்வதற்காக கூறப்படுகிறது. முதல் 3 நாட்கள் படம் அமைதியாகவே ஓடியது. எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை.

அதற்கு பொருள், எந்த சம்பவமும் நடைபெறாது என்பதே. இந்த தப்பித்து கொள்ளும் வகையிலான மன்னிப்பு கோருவது இன்று சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், எங்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ஏதேனும் அவருக்கு தெரிந்தால் எங்களுடன் விவாதியுங்கள் என மம்தா சகோதரியிடம் கூப்பிய கைகளுடன் கூறி கொள்ள விரும்புகிறேன். அவரது தக்க விமர்சனங்கள் எல்லாவற்றையும் கவனித்து கேட்க நாங்கள் விரும்புகிறோம். அதன்பின்பு, எங்களது கண்ணோட்டம் பற்றியும் எடுத்து கூறுவோம் என கூறியுள்ளார்.

தி கேரளா ஸ்டோரி பட டிரைலரில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் பின்னர் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்று காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படம் சட்டரீதியாக சில விசயங்களை எதிர்கொண்டு, அதனால் படத்தின் டிரைலர் ஆனது 32 ஆயிரம் பெண்களை பற்றிய விசயம் என்பதில் இருந்து, பட காட்சிகளில் தோன்ற கூடிய 3 பெண்களை பற்றியது என மாற்றும் கட்டாயத்திற்கு ஆளானது.

இந்த படத்தில் அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.

திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர். நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கு அளித்து உள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் சுதீப்தோ சென் கூறும்போது, இது நம்முடைய ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்குரிய ஒரு பகுதி. ஜனநாயகம் என்ற பெயரில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறுவது என்பது சரியல்ல என கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறும்போது, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். இது இந்த 3 கேரள பெண்களின் கதையல்ல. நாடு முழுவதும் இந்த விசயம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் பார்க்க வேண்டியது நமது பொறுப்பு. இந்த பெண்களின் குரலாகவும் நாம் இருக்க வேண்டி உள்ளது என கூறினார்.


Next Story