நடிகை சாய் பல்லவி மீது இளம் நடிகர் புகார்


நடிகை சாய் பல்லவி மீது இளம் நடிகர் புகார்
x
தினத்தந்தி 7 Feb 2018 5:45 AM GMT (Updated: 7 Feb 2018 5:23 AM GMT)

நடிகை சாய் பல்லவி மீது கரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்திலும் நடிக்க உள்ளார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ‘பிடா’ படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சாய் பல்லவி மீது கரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறுசிறு விஷயங்களுக்கு கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்றார்.

இந்த புகார் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நானியுடன் சாய் பல்லவி நடித்த மிடில் கிளாஸ் அப்பாயி படப்பிடிப்பிலும் இதுபோல் பிரச்சினை ஏற்பட்டது. படப்பிடிப்பில் நானியும் சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார்கள். தற்போது நாகசவுரியாவும் சாய் பல்லவி மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

Next Story