நயன்தாரா சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்தது


நயன்தாரா சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 7 March 2018 11:30 PM GMT (Updated: 7 March 2018 7:46 PM GMT)

நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்ந்தது.

நயன்தாரா இதுவரை, ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்தார். ‘அறம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருடைய சம்பளம் ரூ.4 கோடியாக உயர்ந்தது. இதையடுத்து அவர் மம்முட்டி ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. ஒரு விபத்தில் பலியான முதல்-மந்திரியையும், அவருடைய மரணத்தில் உள்ள மர்மங்களையும் திரைக்கதையாக கொண்ட கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்துக்காக நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியிருப்பதாக பேசப்படுகிறது. ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் முதல் தென்னிந்திய கதாநாயகி, நயன்தாராதான்.

இதில், மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் 5-வது படம், இது. இதற்கு முன்பு இருவரும் 4 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.

‘அறம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா சில நாட்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர் தனது காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு போய் இருக்கிறார். இருவரும் சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு, அமெரிக்கா சென்றார்கள். அங்கு நயன்தாரா நவீன மேக்கப் சாதனங்களையும், அலங்கார பொருட்களையும் வாங்கினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேராக கொச்சி திரும்புகிறார். அங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகும் படத்தில், மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

Next Story