மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சியில் நடித்து வந்த இளம் நடிகை தூக்கு போட்டு தற்கொலை
மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சியில் நடித்து வந்த இளம் நடிகை தனது பிளாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ரியேஜண்ட் பூங்கா பகுதியில் பிளாட் ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தவர் மவுமிதா சஹா (வயது 23). தொலைக்காட்சியில் நடித்து வந்த சஹா கடந்த 2 மாதங்களாக இங்கு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியத்தில் இருந்து அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் அளித்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதில் சஹா அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலை குறிப்பு ஒன்றும் அங்கு கிடந்துள்ளது.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, கடுமையான மனஅழுத்தத்தினால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என கூறியுள்ளனர். சஹாவின் சமூக தளத்தில் சென்று மேற்கொண்ட ஆய்வில், மனஅழுத்தத்தினால் அவர் தனது கடைசி பதிவை எழுதியிருந்தது தெரிய வந்துள்ளது. சஹாவின் மொபைல் போன் அழைப்பு விவரங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளனர்.