ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் அரசியல் கதைக்களத்தில், விஜய்!
விஜய் நடிக்கும் அடுத்த படம் அரசியல் கதைக் களத்தை பின்னணியாக கொண்ட படம்.
‘மெர்சல்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அவருடைய 62-வது படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா நடிக் கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
அரசியல் கதைக் களத்தை பின்னணியாக கொண்ட படம், இது. பட அதிபர் பழ.கருப்பையா, அரசியல் தலைவராக நடிக்கிறார். ‘எம்.எல்.ஏ’வாக ராதாரவி நடிக்கிறார். படத்தில், கிராமத்து அரசியலும் இருக்கிறது. நகரத்து அரசியலும் இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பில், பொதுமக்கள் ‘கியூ’வில் நின்று ஓட்டுப் போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதுவரை வந்த விஜய் படங்களில், இப்படி ஒரு சண்டையை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு படுபயங்கரமான சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன. சமீபத்தில், மும்பையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லட்சுமண் ஆகிய இருவரின் மேற்பார்வையில், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
கதையில் வரும் முக்கிய சம்பவங்கள் தெருக்களிலும், சாலைகளிலும் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதை வெளி மாநிலங்களில் படமாக்கி விடலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தார்கள். சென்னையில் படமாக்கினால், இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று விஜய் ஆலோசனை சொன்னதன் பேரில், சென்னையை அடுத்த பனையூரில் அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story