ஏரியை ஆக்கிரமித்த நடிகர் ஜெயசூர்யா


ஏரியை ஆக்கிரமித்த நடிகர் ஜெயசூர்யா
x
தினத்தந்தி 6 April 2018 10:45 PM GMT (Updated: 6 April 2018 7:14 PM GMT)

ஏரியை ஆக்கிரமித்து நடிகர் ஜெயசூர்யா வசித்து வருகிறார்.

பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா, கொச்சியில் உள்ள சிலவனூர் ஏரி அருகில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பங்களா வீடு கட்டி வசிக்கிறார். வீட்டின் ஓரத்தில் ஏரியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவரும் தனது படகை நிறுத்த வசதியாக படகு துறையும் கட்டி இருப்பதாக அவர் மீது புகார்கள் கிளம்பின.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கிரீஷ் பாபு என்பவர் போலீசிலும் கொச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்தார். மாநகராட்சி அதிகாரிகள் ஜெயசூர்யா வீட்டை நேரில் ஆய்வு செய்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது உண்மை என்று கண்டறிந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றும்படி அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்கள். ஜெயசூர்யா அதை கண்டுகொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் கிரிஷ்பாபு மூவட்டுப்புழா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் நடிகர் ஜெயசூர்யா 3 சென்ட் 700 சதுர அடி ஏரி பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த நடிகர் ஜெயசூர்யா, நிறைய பேர் ஏரியை ஆக்கிரமித்து இருப்பதாக மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ஜெயசூர்யா ஏரியை ஆக்கிரமித்துள்ள பகுதியை இடித்து தள்ளுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் கடப்பாரையுடன் சென்று படகு துறை ஆக்கிரமிப்பை இடித்து அப்புறப்படுத்தினார்கள். ஆனால் காம்பவுண்ட் சுவரை இடிப்பதற்கு ஜெயசூர்யா கோர்ட்டில் தடை வாங்கி விட்டார். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக ஜெயசூர்யா மீது இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

Next Story