‘‘நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டி காரணம்’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு


‘‘நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டி காரணம்’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு
x
தினத்தந்தி 16 July 2018 10:30 PM GMT (Updated: 16 July 2018 7:15 PM GMT)

நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டிதான் காரணம் என்று பட விழாவில் சத்யராஜ் பேசினார்.

மம்முட்டி, அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம் பேரன்பு. அஞ்சலி அமீர், சாதனா, சமுத்திரக்கனி உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ராம் டைரக்டு செய்துள்ளார். பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். இந்த படம் உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச விருதுகளை பெற்று இருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. 

பேரன்பு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், பாலா, மிஷ்கின், சமுத்திரக்கனி, நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவில் மம்முட்டி பேசும்போது, ‘‘பேரன்பு படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பாராட்டுகள் குவிகின்றன. மேலும் பலர் படத்தை பற்றி பேசி வருகிறார்கள். இந்த படம் பேசப்படும் படமாக மாறட்டும்’’ என்றார். 

நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘‘நான் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தேன். அதன்பிறகு மலையாளத்தில் வந்த மம்முட்டி படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து அவற்றில் கதாநாயகனாக நடித்தேன். எனவே நான் கதாநாயகன் ஆவதற்கு மம்முட்டிதான் காரணம். அவர் இப்போதும் புதுமுக நடிகர் போல் எளிமையாக இருக்கிறார் என்றார்.

நடிகர் சித்தார்த் பேசும்போது, ‘‘படத்தில் எல்லோரும் விருதுகள் கிடைக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளனர்’’ என்றார். நடிகை அஞ்சலி பேசும்போது, ‘‘பேரன்பு படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்தது. மம்முட்டியுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்றார்.

Next Story