கோவில் திருவிழாவில் நடிகை கையை பிடித்து இழுத்து ரகளை


கோவில் திருவிழாவில் நடிகை கையை பிடித்து இழுத்து ரகளை
x
தினத்தந்தி 18 July 2018 10:15 PM GMT (Updated: 18 July 2018 5:48 PM GMT)

பிரபல இந்தி நடிகை மஹிகா ‌ஷர்மா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து ரகளை செய்தனர்.

பிரபல இந்தி நடிகை மஹிகா ‌ஷர்மா. இமர்தானி, ரவுத், துவார், மோன்ஜாய், போலீஸ் பேக்டரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். டெலிவி‌ஷன் தொடரிலும் நடித்து வருகிறார். ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கு மஹிகா ‌ஷர்மா சாமி கும்பிட சென்றார். காரை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடந்தார். 

அப்போது ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து கேலி செய்தனர். ஆபாச வார்த்தைகளாலும் திட்டினார்கள். பின்னர் கையை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். அடிக்கவும் முயற்சித்தனர். அந்த கும்பலிடம் சிக்கி மஹிகா ‌ஷர்மா காப்பாற்றுங்கள் என்று அலறினார். அக்கம்பக்கத்தில் நின்ற பக்தர்களும் போலீசாரும் ஓடி வந்து மஹிகா ‌ஷர்மாவை மீட்டனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–

‘‘பூரி ஜெகன்னாதர் கோவிலில் அதிகாலையில் நடக்கும் பூஜையில் பங்கேற்று சாமிகும்பிடுவதற்காக சென்று இருந்தேன். அப்போது கோவிலில் குறைவான பக்தர்களே இருந்தனர். காரை விட்டு இறங்கி சிறிது தூரம் சென்றதும் சிலர் என்னை சூழ்ந்து தொந்தரவு கொடுத்தனர். கையை பிடித்து இழுத்தார்கள். 

போலீசார் வந்து மீட்டனர். இந்த சம்பவம் எனக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. சாமி கும்பிடாமலேயே திரும்பி விட்டேன். அவர்களை பார்க்கும்போது பணக்காரர்கள் போலவும் தாதாக்கள் மாதிரியும் இருந்தார்கள். போலீசில் புகார் அளித்தாலும் வெளியே வந்து விடுவார்கள். இதனால் நான் புகார் அளிக்கவில்லை.’’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story