மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?


மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
x
தினத்தந்தி 20 July 2018 11:45 PM GMT (Updated: 20 July 2018 7:00 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் மேலும் 2 படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாக அறிவித்ததும் உடனடியாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். 

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார். 

காலா படம் திரைக்கு வந்ததும் கட்சி பெயரை அறிவிப்பார் என்று நம்பிய ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க போய்விட்டார். இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இரண்டு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்கும் திட்டத்தில் உள்ளனர். 

அதன்பிறகு கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மேலும் 2 படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதுதான் எங்கள் திட்டம் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிற்க மாட்டோம் என்றும் ஏற்கனவே அவர் தெளிவுபடுத்தி உள்ளார். 

அடுத்த வருடம் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு கட்சி ஆரம்பித்தால் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமும், ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். அதை தவிர்க்க நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மத்தியில் புதிய ஆட்சி உருவான பிறகு கட்சி ஆரம்பிப்பது ரஜினியின் திட்டமாக இருக்கிறது. 

எனவே அதற்கு முன்பு மேலும் 2 படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வந்த முத்து, படையப்பா படங்கள் பெரிய வெற்றிபெற்றன. படையப்பாவின் 2–ம் பாகத்தை எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாகவும் தெரிகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட மேலும் சில இயக்குனர்களிடமும் ரஜினி கதை கேட்டு இருக்கிறார்.

Next Story