மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில், டாப்சி


மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில், டாப்சி
x
தினத்தந்தி 1 Aug 2018 9:30 PM GMT (Updated: 1 Aug 2018 5:17 PM GMT)

மிதாலி ராஜ் வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இப்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மிதாலி ராஜின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதற்கு மிதாலி ராஜும் அனுமதி அளித்துள்ளார்.  சிறு வயது முதல், புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள அவரது வாழ்க்கை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். இந்த படத்தில் தனது வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், எனது குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் ஒத்துப்போகின்றன என்றும் மிதாலி ராஜ் கூறி இருந்தார். 

இந்த நிலையில் மிதாலி ராஜ் வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறும்போது, ‘‘விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மிதாலி ராஜ் வாழ்க்கை கதையை திரைக்கதையாக்கும் முயற்சி நடக்கிறது. எனவே இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்றார். 

ஏற்கனவே கிரிக்கெட் கேப்டன் டோனி வாழ்க்கை படமாக வெளிவந்தது. கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடக்கிறது.

Next Story