சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?


சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
x
தினத்தந்தி 5 Oct 2018 11:45 PM GMT (Updated: 5 Oct 2018 5:25 PM GMT)

விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள 96 படம் பிரச்சினைகளில் சிக்கி மீண்டு திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஏற்கனவே விஷால் நடித்த கத்தி சண்டை படத்தை தயாரித்து இருந்தார். அந்த படத்தில் விஷாலுக்கு சம்பள பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை கொடுத்து விட்டுத்தான் 96 படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விஷால் முட்டுக்கட்டை போட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த பிரச்சினையில் விஜய் சேதுபதி தலையிட்டு 96 படத்துக்காக வாங்கிய ரூ.3 கோடி சம்பளத்தை விட்டுக் கொடுத்தார். அதுவும் கடனை அடைக்க தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு போதவில்லை. இறுதியில் சம்பளம் போக மேலும் ஒரு கோடி ரூபாயை கொடுத்து படம் சிக்கல் இல்லாமல் வெளிவர விஜய் சேதுபதி உதவியதாக தகவல் வெளியானது.

விஜய் சேதுபதி படத்தை தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருக்கும் விஷால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து விஷால் தரப்பில் கூறியதாவது:–

‘‘விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை அவர் தர வேண்டாம். அதற்கான பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் விஷால் வாங்கிக் கொடுத்த ரூ1.50 கோடி தொகையை அவரிடமே விஷால் பெற்றுக் கொள்வார். அதுவரை அந்த தொகைக்கு விஷால் மீண்டும் வட்டி கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் வி‌ஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார்.

மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தார்.

இவ்வாறு விஷால் தரப்பில் கூறப்பட்டது.

Next Story