திரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்


திரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 20 Oct 2018 8:55 AM GMT (Updated: 20 Oct 2018 8:55 AM GMT)

திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை

நடிகை  திரிஷா 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் 96 படம்  வெளியானது, ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் திரிஷா பேட்ட படம் பற்றி டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார்.

இன்று அதிகாலை திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘ஏதோ ஒரு மர்ம கும்பல் திரிஷாவின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவி தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது கணக்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையும் அனுப்பியதை கண்டுபிடித்தோம்.

உடனடியாக டுவிட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டோம். எனவே அந்த அறிவிப்பை திரிஷா வெளியிட்டார். அவர் தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக வாரணாசியில் இருக்கிறார்’ என்றார்.

திரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஏற்கனவே ஒரு முறை இதேபோல்  கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிந்து திரிஷாவை சிக்கலில் சிக்க வைத்தனர்.

இதற்காக திரிஷா கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Next Story