நடிகை சிரிண்டா 2-வது திருமணம் - இயக்குனரை மணந்தார்


நடிகை சிரிண்டா 2-வது திருமணம் - இயக்குனரை மணந்தார்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 9:59 PM GMT)

நடிகை சிரிண்டா, திரைப்பட இயக்குனர் ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.


பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன், முதல் கணவரை விவாகரத்து செய்து நடிகர் திலீப்பை 2-வது திருமணம் செய்துகொண்டார். நடிகை ஸ்வேதா மேனனின் முதல் திருமணமும் முறிந்தது. அவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த வரிசையில் இப்போது நடிகை சிரிண்டாவும் சேர்ந்துள்ளார்.

இவர் தமிழில் வெண்நிலா வீடு என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் போர் பிரண்ட்ஸ், 22 பீமேல் கோட்டயம், அன்னயுன் ரசூலும் ஷெர்லாக் டோம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 19-வது வயதில் அஷப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார்.

4 வருடங்களுக்கு பிறகு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் சிரிண்டாவுக்கும், மலையாள இயக்குனர் சுஜூ எஸ்.பாவாவுக்கும் காதல் மலர்ந்தது. பகத் பாசில், இஷா தல்வர் நடித்த நலே என்ற மலையாள படத்தை சுஜூ எஸ்.பாவா இயக்கி பிரபலமானவர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரிண்டா, சுஜூ எஸ்.பாவா திருமணம் கேரளாவில் நடந்தது. இதில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இவர்கள் திருமண புகைப்படத்தை நடிகை நமீதா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.


Next Story