ராதாரவி, என்னை மிரட்டினார் - பாடகி சின்மயி


ராதாரவி, என்னை மிரட்டினார் - பாடகி சின்மயி
x
தினத்தந்தி 20 Nov 2018 11:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:56 PM GMT)

நடிகர் ராதாரவி தன்னை மிரட்டியதாக, பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமான சின்மயி தொடர்ந்து பல படங்களில் பாடி வந்தார். வாகை சூடவா படத்தில் பாடிய சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுது பாடல் மேலும் அவரை பிரபலபடுத்தியது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்களில் அதிகமாக பாடினார்.

நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இரு தினங்களுக்கு முன்பு திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கினர். இந்த சங்கத்தின் தலைவராக ராதாரவி பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் சின்மயி பாடியுள்ள அடுத்த பாடல் வெளியாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் “ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நான் பாடிய மாயா மாயா மன்மோகனா பாடல் அடுத்து வெளியாகப் போகிறது” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் சின்மயி கூறும்போது, “மீ டூ வில் குரல் கொடுத்ததால் என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கி உள்ளனர். எதிர்த்து பேசியவர்களை ராதாரவி நீக்கி விடுவார். ஏற்கனவே எனக்கு ரெட் போடுவதாகவும் மிரட்டினார். சங்கத்துக்கு 2 வருடம் சந்தா கட்டவில்லை என்று என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து எனக்கு முன் அறிவிப்பு எதுவும் வரவில்லை” என்றார்.


Next Story