மலிவு விலை உணவகம் திறந்து 4 ரூபாய்க்கு சாப்பாடு போடும் ரோஜா
4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் மலிவு விலை உணவகத்தை, நடிகை ரோஜா தொடங்கி இருக்கிறார்.
நடிகை ரோஜா ரூ.4-க்கு சாப்பாடு வழங்கிய காட்சி. அருகில் அவரது கணவர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளார்
தமிழ், தெலுங்கு பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. 10 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்த சாதனை இவருக்கு உண்டு. 1999-ல் அரசியலுக்கு வந்தார். 2014-ல் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் மகளிர் அணி தலைவியாகவும் இருக்கிறார்.இந்த நிலையில் தனது தொகுதியில் மலிவு விலை உணவகத்தை ரோஜா தொடங்கி இருக்கிறார். இதில் 4 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறார். இதற்கு ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம் என்று பெயரிட்டு உள்ளார். நகரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் தினமும் வாகனத்தில் தலா 500 பேருக்கு காலை உணவு, மற்றும் மதிய சாப்பாடு தயார் செய்து கொண்டு போய் விற்கிறார்.
நகரி பஸ் நிலையத்திலும் இதே விலையில் காலை மதியம் உணவு வழங்குகிறார். ரோஜாவைப்போல் மற்ற எம்.எல்.ஏக்களும் இதே போல் மலிவு விலையில் உணவு வழங்க முன்வர வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நடிகை ரோஜா கூறும்போது, “மக்கள் பசியால் கஷ்டப்பட கூடாது என்பதற்காகவே 4 ரூபாய் உணவகத்தை திறந்துள்ளேன். தொகுதி முழுவதும் இந்த ஓட்டலை திறக்க ஆசை” என்றார்.
Related Tags :
Next Story