“ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம்” - ஒடிசா அமைப்பு மிரட்டல்


“ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம்” - ஒடிசா அமைப்பு மிரட்டல்
x
தினத்தந்தி 23 Nov 2018 10:45 PM GMT (Updated: 23 Nov 2018 9:46 PM GMT)

ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம் என ஒடிசா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.


பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். இவர் 2001-ல் ‘அசோகா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அஜித்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். சந்தோஷ் சிவன் இயக்கினார். இந்த படத்துக்கு அப்போது ஒடிசாவில் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்களும் நடந்தன. இதனால் அங்கு ஒரு வாரம் மட்டுமே படத்தை ஓட்டி விட்டு நிறுத்தி விட்டனர். அசோகா படம் வெளியாகி 11 வருடங்கள் ஆன நிலையில் இப்போது மீண்டும் படத்துக்கு எதிராக புதிய பிரச்சினை கிளம்பி இருக்கிறது. படத்தில் கலிங்க போரை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. அமைப்பின் தலைவர் ஹேமந்த ராத் போலீசிலும் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 27-ந்தேதி ஹாக்கி உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை காண வருமாறு நடிகர் ஷாருக்கானுக்கு ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். ஷாருக்கானும் அந்த அழைப்பை ஏற்று விளையாட்டை காண வருகிறார்.

இதற்கு கலிங்க சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அசோகா படத்தில் கலிங்க போரை தவறாக சித்தரித்த ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் ஒடிசா வரும் அவரது முகத்தில் மை வீசுவோம். அவர் செல்லும் இடங்களில் கருப்புகொடியும் காட்டுவோம் என்று அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி அறிவித்து உள்ளார். இதனால் ஷாருக்கானுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க மாநில அரசு ஏற்பாடு செய்து உள்ளது.



Next Story