சம்பள பாக்கி புகார்: சர்ச்சையில், மணிகர்னிகா படம்


சம்பள பாக்கி புகார்:  சர்ச்சையில், மணிகர்னிகா  படம்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:15 PM GMT (Updated: 4 Dec 2018 6:38 PM GMT)

மணிகர்னிகா படத்தில் பணியாற்றியவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவரது முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. குறுகிய தலைமுடி, தலையில் முண்டாசு, தோடு, மூக்குத்தி அணிந்து வாளுடன் கம்பீரமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். 

தீபிகா படுகோனே நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த பத்மாவத் படம் போல் மணிகர்னிகா படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு பட வேலைகளில் இருப்பதால் கங்கனா ரணாவத்தே சில காட்சிகளை படமாக்கினார். 

படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துக்கும், சக நடிகருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையிலும் இந்த படம் சிக்கி உள்ளது. துணை நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. 

ரூ.1.5 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை கொடுக்காமல் படத்தை திரைக்கு கொண்டுவர அனுமதிக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய சினிமா, டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story