ரகுல் பிரீத் சிங்கின் புத்தாண்டு விருப்பம்


ரகுல் பிரீத் சிங்கின் புத்தாண்டு விருப்பம்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:15 PM GMT (Updated: 31 Dec 2018 11:15 PM GMT)

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது புத்தாண்டு விருப்பங்களை தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் பிரபலமான ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். புத்தாண்டு விருப்பங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

“புத்தாண்டில் இன்னும் கூடுதலாக உழைக்க முடிவு செய்துள்ளேன். இந்த வயதில் உழைத்துத்தான் ஆகவேண்டும். இப்போது சும்மா இருந்தால் கடைசி காலத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த வருடம் நிறைய இடங்களில் ஓட்டல் திறக்க முடிவு செய்துள்ளேன்.

உடல் வலிமை முக்கியம். உடற்பயிற்சி என்பது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வலிமையாக இருந்தால்தான் எல்லாவற்றையும் தாங்க முடியும். கவலையாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி உடற்பயிற்சியை மட்டும் நிறுத்தவே மாட்டேன்.

எதை விதைக்கிறீர்களோ அதுதான் செடி வடிவில் வெளியே வரும். நீங்கள் உடம்பை எப்படி பார்த்துக்கொள்கிறீர்களோ? அதைப் பொறுத்தே உங்களை அது நன்றாக பார்த்துக்கொள்ளும். மனதார சாப்பிட்டு முடிந்த அளவு உடற்பயிற்சி செய்தால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் எண்ணம் ஏற்படும்.

ஒரு நாள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் வாழ்க்கையில் ஏதோ இழந்த மாதிரி இருக்கும். தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையிலும், தமிழில் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே படங்களிலும் நடிக்கிறேன்.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.


Next Story