நடிகைகளை பாதுகாக்கும் ‘மீ டூ’ –பிரீத்தி ஜிந்தா


நடிகைகளை பாதுகாக்கும் ‘மீ டூ’ –பிரீத்தி ஜிந்தா
x
தினத்தந்தி 7 Jan 2019 10:00 PM GMT (Updated: 7 Jan 2019 5:29 PM GMT)

மீ டூ-வால் நடிகைகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது என்று நடிகை பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகையும், ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா திருமணத்துக்கு பிறகு  சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:–

‘‘சினிமா துறையில் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் மீ டூ இயக்கம் வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலத்துக்கு வருவது இல்லை. அதை அப்படியே மூடி மறைத்து விடுவார்கள். இப்போது மீ டூவால் பயம் வந்துள்ளது. நடிகைகளுக்கு பாதுகாப்பும் கிடைத்துள்ளது. 

திரைப்படத்துறையில் நடிகைகளுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் தாராளமாக வெளிப்படுத்தலாம். அதை மக்களும் அக்கறையுடன் கேட்பார்கள். ஆனால் மற்ற துறைகளில் பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல முன்வந்தால் அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவர்கள் வேலைகளையும் இழக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. 

என்னை சினிமா துறையில் யாரும் தவறாக அணுகியது இல்லை. படப்பிடிப்புகளில் என்னை ஆபாசமாக படம் எடுத்தாலும் நான் அனுமதிப்பது இல்லை. நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். நடிகர் சன்னி தியோலும் அவரது படத்தில் நடிக்க வற்புறுத்தினார். எனது கணவரும் நடிக்க சொன்னார். இதனால் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன்’’.

இவ்வாறு பிரீத்தி ஜிந்தா கூறினார்.

Next Story