“பிரபுதேவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” - நிக்கி கல்ராணி சொல்கிறார்


“பிரபுதேவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” - நிக்கி கல்ராணி சொல்கிறார்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:51 PM GMT (Updated: 19 Jan 2019 10:51 PM GMT)

பிரபுதேவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என நடிகை நிக்கி கல்ராணி கூறினார்.

‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு, அதா சர்மா, அரவிந்த் ஆகாஷ் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்கி உள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பிரபுதேவா கூறியதாவது:-

“சார்லி சாப்ளின் படப்பிடிப்பு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. படம் வந்த பிறகு சிலர் பாராட்டலாம் சிலர் எதிராக பேசலாம். பாராட்டுவதை ஏற்கும்போது, விமர்சனங்களையும் ஏற்க வேண்டும். இந்த படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று தொடர்ந்து எடுக்க திட்டம் உள்ளது. நல்ல மனதோடு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். எல்லோரும் நல்ல மனதோடு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு பிரபுதேவா பேசினார்.

டைரக்டர் ஷக்தி சிதம்பரம் பேசியதாவது:-

“சார்லி சாப்ளின் முதல் பாகம் 2002-ல் வெளியானது. 17 வருட இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகம் வருகிறது. 2 வருடத்துக்கு முன்பு இந்த படத்தின் கருவை பிரபுதேவாவிடம் சொன்னதும், அவருக்கு பிடித்தது. பிறகு கதை தயார் ஆனது. படத்துக்கு ‘சார்லி சாப்ளின்-2’ என்று பெயர் வைத்துள்ளோம். தயாரிப்பாளர் சிவா படத்துக்கு தேவையான அளவுக்கு செலவு செய்தார். பிரபுதேவா காட்சிகளை உள்வாங்கி ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடித்தார். படம் நன்றாக வந்ததற்கு அவரும் ஒரு காரணம். எங்கள் நட்பு தொடரும்.

இந்த படத்தை 3, 4-வது பாகங்கள் என்று தொடர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளோம். அம்ரீஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். “சின்ன மச்சான்” பாடலின் தன்மை கெடாமல், அதை விட பிரமாதமாக ‘ரிதம்’ போட்டு உருவாக்கி இருக்கிறார். அம்ரீசுக்கு இது முக்கிய படமாக இருக்கும். இன்று நமக்கு தோழனாக இருப்பது வாட்ஸ் அப். அதுபோல் ஆப்பு வைப்பதும் வாட்ஸ்அப்தான் என்பது படத்தின் கதை. இவ்வாறு அவர் பேசினார்.

நிக்கி கல்ராணி பேசியதாவது:-

‘சார்லி சாப்ளின்-2,’ என் மனதுக்கு நெருக்கமான படம். ஜாலியாக-குடும்பமாக வேலை செய்தோம். பிரபு பாசமாக பார்த்துக்கொண்டார். சுதந்திரமாக வேலை செய்தோம். “சின்ன மச்சான்” பாடல் பிடித்து இருந்தது. அது இந்த அளவுக்கு ‘ஹிட்’டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம், அம்ரீஷ். படத்தில் நகைச்சுவை, காதல் எல்லாம் இருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும்.

நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர் இல்லை. நடனம் தெரியாது. சினிமாவுக்கு வந்தபிறகுதான் நடனம் கற்றுக்கொண்டேன். பிரபுதேவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். தமிழ் திரையுலகுக்கு நான் வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வருடத்தின் முதல் படமாக ‘சார்லி சாப்ளின்-2’ வெளியாகிறது. இவ்வாறு நிக்கி கல்ராணி பேசினார்.

தயாரிப்பாளர் டி.சிவா, இசையமைப்பாளர் அம்ரீஷ் ஆகியோரும் பேசினார்கள்.


Next Story