லண்டன் இளைஞரை பிரிந்தார் நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது


லண்டன் இளைஞரை பிரிந்தார் நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது
x
தினத்தந்தி 26 April 2019 11:00 PM GMT (Updated: 26 April 2019 5:49 PM GMT)

நடிகை சுருதிஹாசன்-மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் சுருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சந்தித்து காதல்வயப்பட்டனர்.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் சுருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டியும் சுருதிஹாசன் பட்டு சேலையும் அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தின.

சுருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சுருதிஹாசன் மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்கேல் புகைப்படங்களை நீக்கி மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக பதிவிட்டுள்ளார். மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். விஜய்சேதுபதி ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

Next Story