திமிர் பிடித்தவள் என்று பட அதிபர்கள் அவதூறு - நித்யா மேனன் வருத்தம்


திமிர் பிடித்தவள் என்று பட அதிபர்கள் அவதூறு - நித்யா மேனன் வருத்தம்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 5:14 PM GMT)

தமிழில் வெப்பம், காஞ்சனா-2, இருமுகன், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். ஜெயலலிதா வாழ்க்கை படமான ‘த அயன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.

மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நித்யாமேனன் தயாரிப்பாளர்களை மதிப்பது இல்லை என்று தகவல்கள் பரவின.

டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நித்யாமேனன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

“என்னை பற்றி தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகிறார்கள். நான் ராஜீவ் குமார் இயக்கும் ‘தள்சமயம் ஒரு பெண்குட்டி’ என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது எனது தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும்போது தனியாக ஒரு அறைக்குள் சென்று அழுவேன். எனக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. அம்மாவை நினைத்தும், எனக்கு ஏற்பட்டுள்ள மைக்ரேன் தொல்லையாலும் அழுது கொண்டு இருந்தபோது பல தயாரிப்பாளர்கள் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய என்னை சந்திக்க வந்தார்கள்.

அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர்களை அப்புறம் சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன். அது தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்களுடன் பேசாத காரணத்தால் நான் திமிர் பிடித்தவள் என்று வெளியில் தவறாக பரப்பி விட்டனர்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story