இந்திய பாசமும்.. ஆவேசமும்..
‘மோடி பிரதமரானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவேன்’ என்று கூறியதாக வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்று மறுக்கிறார், பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி.
‘மோடி பிரதமரானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவேன்’ என்று கூறியதாக வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்று மறுக்கிறார், பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி. ‘பொய்ச் செய்தி’ படை, தன்னைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பரப்பிவிட்டதாகக் கூறுகிறார் அவர்.
வழக்கமாக தைரியமாக அரசியல் கருத்துகளைக் கூறக்கூடியவர், அரசு நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பக்கூடியவர் ஷபனா. ஆனால், இந்தச் செய்தி முழுக்க முழுக்க புனையப்பட்டது என்று டுவிட்டரில் அடித்துச் சொல்லி யிருக்கிறார்.
‘‘நான் இப்படி ஒன்றைச் சொல்லவே இல்லை. நாட்டை விட்டுப் போகும் எண்ணமும் எனக்கு இல்லை. நான் இந்தியாவில்தான் பிறந்தேன், இந்தியாவில்தான் சாவேன். என்னைப் பற்றி இப்படி ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பிய படைக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொய்ச் செய்தியாளர்களின் நிலை பரிதாபம்தான். நிஜமான பிரச்சினையைப் பற்றி பேச முடியாத அவர்கள், மக்கள் நம்பிவிடுவார்கள் எனக் கருதி இதுபோன்ற பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்’’ என்றார்.
மேலும், ‘‘இதுபோன்ற நபர்கள், ஏதோ பயத்தின் காரணமாகத்தான் இப்படி ஓவராகப் போகிறார்கள். அவர்களின் முகத்துக்கு நேராகப் பதிலடி கிடைக்கும்போது அவர்கள் சுருண்டு போவார்கள்’’ என்கிறார் ஷபனா.
தனது பதிலடி என்பது, வார்த்தைகளால்தான் இருக்கும் என்றும் இவர் விளக்குகிறார்...
‘‘நம் எதிராளிகளை எதிரிகளைப் போல கருதக்கூடாது என்று எனது தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். வாதத்தை, பதில் வாதத்தால் வெல்வதுதான் முதிர்ச்சியான முறை. மாறாக எதிராளியைப் பற்றி பொய்களையும், புனை கதைகளையும் பரப்பி விடுவதல்ல. குட்டையைக் குழப்பும் அர்த்தமற்ற சலசலப்புகளை விட புத்திசாலித்தனமான வாதத்தையே நான் விரும்புகிறேன்’’ என்று சொல்லி முடிக்கிறார், ஷபனா ஆஸ்மி.
Related Tags :
Next Story