படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது


படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 11:03 PM GMT (Updated: 21 Jun 2019 11:03 PM GMT)

படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


பிரபல இந்தி நடிகை மஹி ஹில். இவர் சல்மான்கானின் தபாங் தபாங்-2, மிர்ச்சி, சஞ்சீர், புல்லட் ராஜா, அனுராக் காஷ்யப் இயக்கிய தேவ்.டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்சர் என்ற இணையதள தொடரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை காட்பண்டர் சாலையில் உள்ள தொழிற்சாலையில் நடந்து வந்தது.

இந்த படப்பிடிப்பு தளத்துக்குள் சில ரவுடிகள் புகுந்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தாக்கினார்கள். நடிகை மஹி ஹில் மீதும் அடி விழுந்தது. மேலும் சில பெண் கலைஞர்களும் தாக்கப்பட்டனர். படப்பிடிப்பு நடைபெறும் இடம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று மிரட்டல் விடுத்தபடி மரக்கட்டைகளால் தாக்கினர்.

இதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் துடியாவின் மண்டை உடைந்து. இயக்குனருக்கு தோள்பட்டை இறங்கியது. இந்த சம்பவம் குறித்து மஹி ஹில் கூறும்போது, “போதையில் வந்த ரவுடி கும்பல் எங்களை தாக்கினர். நான் வேனில் ஏறி கதவை மூடிக்கொண்டேன். வேனையும் அடித்து நொறுக்கினார்கள்” என்றார்.

ரவுடிகள் தாக்கிய வீடியோவை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிசை படக்குழுவினர் சந்தித்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கிருஷ்ண சோனார், சோனு தாஸ், சுராஜ் ஷர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story