அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.


அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.
x
தினத்தந்தி 2 July 2019 12:00 AM GMT (Updated: 1 July 2019 7:18 PM GMT)

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.

இப்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். அத்துடன் படத்தின் கதையையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறும்போது, “தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் செய்த ஒரு பெரிய காரியத்துக்காக பாராட்டு விழா நடத்துகின்றனர். அப்போது ரஜினிகாந்த் நான் கடமையைத்தான் செய்தேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா. போலீஸ் உடையை கழற்றினால் நானும் உங்களில் ஒருவன்தான் என்று வசனம் பேசுவார்.

தொடர்ந்து ஒரு பாடலை பாடுவார். அந்த பாடலைத்தான் நான் பாடி இருக்கிறேன்” என்றார்.

Next Story