வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்! - இயக்குநர் ரமணா


வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்! -  இயக்குநர் ரமணா
x
தினத்தந்தி 28 Aug 2019 8:39 AM GMT (Updated: 28 Aug 2019 8:39 AM GMT)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விஜய் பட இயக்குநரை போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக நடத்தினர். இதற்கு காவல்துறை அதிகாரி வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்ததாக ரமணா கூறி உள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா சந்திரசேகர் . தனுஷை வைத்து சுள்ளான் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார். 

நீண்ட காலமாக தொண்டை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர போராடி வருகிறார்.

இயக்குநர் ரமணா சந்திரசேகர் போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் பேஸ் புக்கில் வேதனையுடன்  தெரிவித்து இருந்தார்.அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். அது ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இதை தொடர்ந்து  அதிகாரிகள் சிலர் வருத்தம் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து இயக்குனர் ரமணா தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:

நெஞ்சார்ந்த நன்றிகள்... 🙏கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக,

இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பு செய்தது.... அதன் விளைவாக

இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் திரு. கிருஷ்ணமூர்த்தி  ( Asst. Commr of police / Traffic investigation/ East range )

திருமதி K. ஷோபனா  ( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range )

இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும்,திரு. பெரோஸ் கான் அப்துல்லா ( Deputy commissioner of police / East Dist . Traffic ) 

என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏 என்று அக்கடிதத்தில் இயக்குநர் ரமணா தெரிவித்துள்ளார். 

Next Story