சகிப்பு தன்மையே மதம்: குஷ்புவை பாராட்டிய கஸ்தூரி


சகிப்பு தன்மையே மதம்: குஷ்புவை பாராட்டிய கஸ்தூரி
x
தினத்தந்தி 4 Sep 2019 11:15 PM GMT (Updated: 4 Sep 2019 9:09 PM GMT)

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பு தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரான குஷ்பு மத அடையாளத்தை வெளிப்படுத்தியது இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவுடன் ஏற்பட்ட மோதலால் டுவிட்டர் பக்கத்தில் தனது நிஜப்பெயரை குறிப்பிட்டார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு அது சம்பந்தமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அவற்றை பார்த்து குஷ்புவை நடிகை கஸ்தூரி பாராட்டினார்.

கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண் தமிழகத்தில் ஒரு இந்து குடும்பத்தின் மருமகளாகி இரண்டு மதங்களின் நம்பிக்கைக்கும் உண்மையாக இருக்கிறார். அன்புதான் கடவுள், சகிப்பு தன்மையே மதம்” என்று குறிப்பிட்டு உள்ளார். கஸ்தூரியின் பாராட்டுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, “ஒரு திருத்தம். மும்பையில் பிறந்த ஒரு இந்திய பெண் தமிழகத்தின் அடையாளம் ஆகி இருக்கிறார். இங்கு ஒரு சக இந்தியரை மணந்து மதசார்பின்மையையும் மனித நேயத்தையும் நிலை நாட்டி இருக்கிறார். என்னுடையை இந்திய தேசம் இது. சாதியும் மதமும் உண்மையான அன்புக்கு இடையில் வர முடியாது. உண்மையான கடவுள் அன்புதான்.” என்று கூறியுள்ளார்.

குஷ்பு கருத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.

Next Story