விஜய் படத்தை இயக்க கதை தயார் -டைரக்டர் பேரரசு
நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்று டைரக்டர் பேரரசு கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக ‘பிகில்’ தயாராகி உள்ளது. இதில் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் விஜய் வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிகில் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
அடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதில் கல்லூரி மாணவராக அவர் நடிக்கிறார் என்றும் முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். இதுகுறித்து பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“விஜய்யின் 65-வது படத்தை நான் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்த வண்ணம் இருக்கிறது. நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்பது உண்மை.
நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்த செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.”
இவ்வாறு பேரரசு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story