யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை


யானை தந்தம் வைத்திருந்ததாக  நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 21 Sep 2019 9:31 AM GMT (Updated: 21 Sep 2019 9:31 AM GMT)

யானைத் தந்தங்களை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

எர்ணாகுளம்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் தேவாராவில் உள்ள மோகன்லாலின் வீட்டில் 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மோகன்லால் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனின் தலையீட்டால், மோகன்லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மேலும் தந்தங்களை மோகன்லாலே வைத்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. தந்தங்களை வைத்துக் கொள்வதற்கான அனுமதிச் சான்றிதழை  முதன்மை வனப் பாதுகாவலர் வழங்கினார்.

பிரச்சினை ஓய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 39 பிரிவு 3ன் கீழ் தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

இதை உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியவுடன், மோகன் லாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் அம்மாநில வனத்துறை தூசி தட்டி எடுத்தது. பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. அதில் மோகன்லாலின் பெயர் முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளது.

Next Story