"நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்


நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்
x
தினத்தந்தி 9 Oct 2019 7:53 AM GMT (Updated: 9 Oct 2019 7:53 AM GMT)

'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

சென்னை

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மப்டி படதமிழ் ரீமேக்கை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கைப்பற்றியிருந்தார். ஸ்ரீ முரளி நடித்த கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வந்தனர்.

ஆனால்  சிம்பு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவுக்காகச் சென்றுவிட்டதால் ஷூட்டிங் பாதியில் நின்று இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மீண்டும் சென்னை திரும்பிய சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவை மப்டி படத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் 'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்து உள்ளார்.

அதில், பெங்களூருவில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் சிம்பு சரியாக வரவில்லை என்றும், வந்தாலும் 4 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளார். மேலும் அடுத்தக்கட்டப் படப்பிடிப்புக்காகத்  தேதிகள் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் தனக்கு பணம் நஷ்டம் அடைகிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மப்டி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதால், படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story