சமூகத்தில் பாதுகாப்பு இல்லை: “பெண்கள் தற்காப்பு கலையை கற்பது அவசியம்” - நடிகை அமலாபால்


சமூகத்தில் பாதுகாப்பு இல்லை: “பெண்கள் தற்காப்பு கலையை கற்பது அவசியம்” - நடிகை அமலாபால்
x
தினத்தந்தி 20 Jan 2020 12:11 AM GMT (Updated: 20 Jan 2020 12:11 AM GMT)

சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் தற்காப்பு கலையை கற்பது அவசியம் என்றும் நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

அமலாபால் நடித்துள்ள புதிய படம் ‘அதோ அந்த பறவை போல.’ ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் அமலாபால் பேசியதாவது:-

“அதோ அந்த பறவை போல படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இளம்பெண் எந்த உதவியும் இல்லாமல் தனி ஆளாக காட்டில் சிக்கி எப்படி வெளியில் வருகிறாள் என்பது கதை. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது அவசியம். இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு படம் வருவது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்துக்காக ‘கிராமகா’ என்ற தற்காப்பு கலையை கற்றுக்கொண்டேன். இதன் மூலம் நிஜ வாழ்க்கையில் எனக்கு தைரியம் வந்துள்ளது. எதிரியை எந்த இடத்தில் அடித்தால் விழுவான் என்று தெரியும். எங்கள் குழுவில் எல்லோரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். இந்த படத்திற்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

நான் கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்.”

இவ்வாறு அமலாபால் பேசினார்.

விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், டைரக்டர் திருமலை, தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story