அரண்மனை 3-ம் பாகத்தில் ஆர்யா, ராஷிகண்ணா?


அரண்மனை 3-ம் பாகத்தில் ஆர்யா, ராஷிகண்ணா?
x
தினத்தந்தி 20 Jan 2020 12:36 AM GMT (Updated: 20 Jan 2020 12:36 AM GMT)

அரண்மனை 3-ம் பாகத்தில் ஆர்யா, ராஷிகண்ணா ஆகியோர் நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினியின் எந்திரன், அஜித்குமாரின் பில்லா படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களாக வெளியானது. ராகவா லாரன்சின் காஞ்சனா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, நான் அவனில்லை ஆகிய படங்களின் இரண்டாம் பாகமும் வந்துள்ளன.

கமலின் விக்ரம், ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம், பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் திட்டமும் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 2 பாகங்களாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது.

முந்தைய இரண்டு பாகங்களையும் சுந்தர்.சி நடித்து இயக்கி இருந்தார். அரண்மனை முதல் பாகத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும், இரண்டாம் பாகத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story