மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை -நடிகர் விக்ரம்பிரபு
மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று நடிகர் விக்ரம்பிரபு கூறினார்.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்துள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இதில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா ஆகியோர் நடித்துள்ளனர். தனா இயக்கி உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் சரத்குமார் பேசும்போது, “இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும். குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது:-
“மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. வானம் கொட்டட்டும் வித்தியாசமான குடும்ப கதையாக இருக்கும். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று தான் பார்ப்பேன். இயக்குனரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்திலும் அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தது. கோயம்பேடு மார்க்கெட் கூட்டத்தில் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியது புதுமையாக இருந்தது. ராதிகா எனக்கு பிடித்த நடிகை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சுலபமாக நடித்துவிடுவார்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் சித் ஸ்ரீராம், நடிகைகள் சுஹாசினி, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story